நகரத்ததார் பூம்புகாரில் இருந்த காலத்தில் பாண்டியன், தன்னாட்டுக்கு நற்குடிகள் வேண்டுமென்று சோழனிடம் வேண்ட அவன் இக்குலத்தினரையும் பாண்டி நாட்டுக்கு அனுப்பினான் என்பது வரலாறு. சாலிவாகன சகாப்தம் 629(கி.பி.707) இல் இவர்கள் பாண்டி நாட்டிற்கு வந்தனர்.காவிரிப்பூம்பட்டினத்தில் மேலத்தெரு ஆறுவழியாராக இருந்த வணிகப்,பெருமக்கள் ஆரியூரை வாழ்விடமாகக் கொண்டும் பிரான்மலைக் கோயிலை வழிபட்டுக் கோயிலாககாக் கொண்டும் வசிக்கலாயினர் எனவும் அறிகின்றோம்.பிற்காலத்தில் "அரியூர்ப்பட்டணம் சாலிவாகன 1210(கி.பி.1228) இல் கலகத்தில் அழிந்து போனதால் அங்கு வாழ்ந்திருந்த 64 வைசியர்களும் திசை தப்பிப் போய் மலையாளம் சேர்த்து கோட்டாரற்றனங்கரையில் குடியிருப்பு அமைத்து,மரகத விநாயகருக்குக் கோயிலும் கட்டி,வழிபட்டு வருகிறார்கள்" என்று நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றில் கூறப்பெற்றுள்ளது.இக்காலத்தும் இந்த அருவியூர் நகரயத்தார் சமூகத்து மரபினர் கோட்டாற்றில் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.ஆயினும் அரியூர்ப்பட்டனம் கலகத்தால் அழிடந்த காலத்தில் திசை தப்பிப் போனவர்களில் சிலகுடியினர் சில காலம் கழித்துப் பிரான்மலைப் பகுதியில் குடியேறியுள்ளனர் என்பதும் வரலாற்றுண்மை. இது,இக்காலத்தும் மரகத விநாயகர் பூசைக்கு ஆண்டுட்தோறும் பிரான்மலை வட்டாகை அருவியூர் நகரத்தார் சமூகத்தினருக்கு அழைப்பு வருவதாக இச்சமூத்தினர் கூறுவதால் உறுதியாகிறது.
இக்குலத்தினர் வாழ்ந்திருந்த அரியூர் எவ்விடத்தில் இருந்ததென அறிய
முடியவில்லை. இவ்வூர் கல்வெட்டுக்களில் அரியூர் என்றும் அருவியூர் என்றும்
குறிக்கப்பெற்றுள்ளது. பிரான்மலையிலுள்ள குலசேகரபாண்டியன் ஆட்சியாண்டு 16
(கி.பி.1226) கல்வெட்டு "கேரள சிங்க வளநாட்டு அருவியூரான
குலசேகரப்பட்டினம்" (S.I.I.Vol.VII.No.440) என்றும், பிரான்மலையிலுள்ள
சொக்கநாதர் கோயில் உள்ள கல்வெட்டு "கேரள சிங்க வளநாட்டு அருவிமானகரமான
குலசேகரப்பட்டினத்து நகரத்தோடும்" (S.I.I.Vol.VII.No.442)
என்றும் குறிக்கின்றன. திருப்பத்தூர்க் கல்வெட்டுக்கள் "கேரள
சிங்கவளநாட்டு அருவியூரான குலசேகரப்பட்டணம்" (167 1935-36) என்றும்,
"அருவியூரான குலசேகரப்பட்டினம்" (112/1908) என்றும் கூறுகின்றன. இந்த
அருவியூர் முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் (கி.பி.1268-1310)
அவன் பெயரால் குலசேகரப்பட்டினம் என்று வழங்கப்பெற்றதாக
அறிகின்றோம்.இந்நகரம் சாலிவாகன சகாப்தம் 1210 (கி.பி.1288) இல் கலகத்தால்
அழிவுற்றது என்று நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு கூறுகிறது. கி.பி.1288
இல் குலசேகரபாண்டியன் கொடிகட்டியாண்ட காலமாகும். எனவே, அருவியூர் நகரம்
அழிவுற்றது எந்த ஆண்டு என்பது சிந்திக்கத்தக்கது.
குலசேகரபாண்டியனுக்குப்பின் வந்த அவன் மகன் சுந்தரபாண்டியன் தந்தையின்
மீதிருந்த தீராத சினத்தால் கி.பி.1310 இல் குலசேகரபாண்டியனைக் கொன்று
பட்டத்திற்கு வந்தான். இந்தச்சுந்தரபாண்டியனும் மற்றொரு பாண்டியனான
வீரபாண்டியனும் ஓரே காலத்தில் வெவ்வேறிடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர்.
இவ்விருவருக்கும் நிகழ்ந்த போரில் தோல்வியுற்ற சுந்தரபாண்டியன் அலாவுதீன்
கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூரைத் தென்னாட்டின்மீது படையெடுத்து
வருமாறு அழைத்தான்.இது கி.பி.1310 ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்தது என்று
மகமதிய சரித்திர ஆசிரியன் "வாகப்" என்பவன் கூறியுள்ளான் என்பார்
வரலாற்றாசிரியர். எனவே , சுந்தர்பாண்டியனும் மாலிக்காபூரும் சேர்ந்து
குலசேகரபாண்டியன் பெயரால் அமைந்திருந்த அருவி மாநகரை கி.பி.1310 இல்
அழித்துவிட்டனர் என்பதே வரலாற்றுக்கு இசைந்ததாகும்.
ஏறத்தாழ 700
ஆண்டுகளாக இந்த அருவியூர் நகரத்தார் சமூகத்தார் இத்திருகோயிலை வழிபடு
கோயிலாகக் கொண்டு வழிவழியாகக் திகழ்ந்து வருகின்றனர். மங்கை பாகரும்
இக்குளத்தினருக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.